செந்தமிழ் நாடு- பாடல்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு

வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

செந்தமிழ் நாடு- பாடல் விளக்கம்

பாரதி, தமிழ் மீது கொண்ட காதலில் எழுதிய பாடலை பார்த்தோம். அதற்க்கு உண்டான உண்மையான விளக்கம் தெரிந்தால் நமக்கும் தமிழ் மீது உள்ள காதல் பற்று அதிகரிக்கும்.

செந்தமிழ்♥️ என்று சொல்லும் போதே தமிழ் ஒரு இனிமையான மொழி என்றும் செந்தமிழ் நாடு என்பதன் மூலம் தமிழ்நாடு அணைத்து வளங்களையும் கொண்ட சிறப்பான நாடு💪🏻 என்றும் நமக்கே தெரிகிறது. மண், மலை, கடல், இயற்க்கை வளம் கொண்ட நம் நாடு காவிரி, தென்பண்ணை, பாலாறு, வைகை போன்ற ஆறுகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

கல்வி🏫 என்று எடுத்துக்கொண்டால், ஆதியில் இருந்து திருவள்ளுவர் முதல் கம்பன் வரை பெண்களில் ஔவையார் முதல் காக்கைப் பாடினியார் வரை அவ்வளவு ஏன் இன்றும் கூகிள் சுந்தர் பிச்சை முதல் இஸ்ரோ சிவன் வரை அனைவரும் கல்வியில் சிறப்பு வாய்ந்தவர்கள்.

உலக🌍 அளவில் தமிழின் பெருமையை வள்ளுவர் உணர்த்தியுள்ளார். உலகில் உள்ள நூல்கள்📖, பாடல்கள்🎶 அனைத்துமே சமய சார்புடையது. ஆனால் நமது வள்ளுவன் இயற்றிய குரல்கள் எந்த சார்பும் இல்லாமல் தனித்து விளங்கியதால் உலக புகழ் பெற்ற பொது மறை என்று இதை அழைப்பார்கள்.

வணிகம் பற்றி: பண்டைய காலங்களிலேயே தமிழர்கள் எகிப்து🇪🇬, சீனா🇨🇳, சிங்கப்பூர்🇸🇬, மலேசியா🇲🇾 போன்ற நாடுகளுடன் வணிக தொடர்புகளை வெற்றிகரமாக நடத்தி வந்தனர். ஏலக்காய்(ஏலம்), கிராம்பு (இலவங்கம்) போன்றவை அதிக அளவில் வணிகம் செய்யப்பட்டன.

இது போக, தமிழர்கள் தமது அறிவு திறன்👌, வணிக திறன்👔, கலை🤼‍♂️, கல்வி👨‍🎓, மற்றும் அணைத்தையும் சென்ற இடமெல்லாம் அனைவருக்கும் கற்பித்து தமிழின் பெருமையை அப்பொழுதே உயர்த்தியுள்ளனர்.

இவை அனைத்தையும் பாரதியார் செந்தமிழ் நாடெனும் என்ற பாடல் மூலம் அழகாக வடிவமைத்துள்ளார்.

பொருள் விளக்கம்

போதினிலே = பொழுதில்

மேவிய = பொருந்திய

மேனி = உடல் (தமிழ்நாட்டின் பகுதிகள்)

பார் = உலகம் 

வீசும் = பரவும்

வான் = உயர்ந்த

மிசிரம் = எகிப்து

யவனரகம் = கிரேக்கம் 

படைத்தொழில் = போர்த் தொழில்

SOURCEதமிழ் இணைய கல்வி.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here